தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்மேற்கு பருவக்காற்று துவக்கத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில், இன்று திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு திசையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நோக்கி வீசும் காற்றின் காரணமாக, ஜூன் 7ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும்,
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், மாலை நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் ஜூன் 5-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.