சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நேற்று இரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில், சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்றைய மாலை மழை மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றும் மழை பெய்யும் என்பதால் சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.