பிகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். "பிகாரில் 'பொய்களின் பெருமழை' மற்றும் 'பொய்யான வாக்குறுதிகளின் ஆலங்கட்டி மழை' பெய்கிறது," என்று வானிலையை வேடிக்கையாக குறிப்பிட்டு அவர் கிண்டலடித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி, RJD-காங்கிரஸ் கூட்டணியின் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்திருந்தார். "அதிகாரத்திற்காக துடிப்பவர்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே உழைக்கிறார்கள்; என் அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது," என்று மோடி கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, லாலு யாதவ் தனது X பக்கத்தில், "பிகார் நலன் கருதி வானிலை எச்சரிக்கை. இன்று பொய்கள், பொய்யான வாக்குறுதிகள் மற்றும் மாயைகளின் பெருமழை பெய்கிறது. ஆலங்கட்டிகள் இடியுடன் விழுகின்றன, கவனமாக இருங்கள்," என்று பதிவிட்டார்.
மேலும், என்டிஏ கூட்டணியின் வாக்குறுதிகளுக்கும், மக்களின் எதார்த்த நிலைக்கும் இடையிலான முரண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு AI வீடியோவையும் லாலு யாதவ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வாக்குறுதிகளின் வெள்ளத்தில் தவிக்கும் கிராம மக்களை காட்டும் காட்சிகள், நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி உடைந்த பாலத்தின் கீழ் நடனமாடும் காட்சிகள் ஆகியவை NDA ஆட்சியில் உள்கட்டமைப்பு சீர்குலைவு மற்றும் ஊழலைக் குறிப்பதாக லாலு விமர்சித்துள்ளார்.