Publish Date: Thu, 13 Jun 2019 (10:34 IST)
Updated Date: Thu, 13 Jun 2019 (10:36 IST)
நடிகரும் முன்னாள் திமுக உறுப்பினருமான ராதாரவி தான் அதிமுகவில் இணைந்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து "பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருமாறியதை அடுத்து திமுகவில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து ராதாரவி நேற்று அதிமுகவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் ‘தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் அணியை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டிவருகிறேன்.ஆனால் ராதாரவி சொல்பவருக்கு ஆதரவாக யாரும் செயல்பட்டால் திமுகவில் இருந்து அவர்களை நீக்குவோம் எனக் கூறியுள்ளனர். இந்த சிறிய தேர்தலில் மிகப்பெரிய கட்சியான திமுக தலையிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை நம்பித்தான் அதில் இணைந்தேன். உண்மையில் திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது.அந்த இன்னொரு தலைமை யார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.