அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், “யார் அந்த சார்?” என்ற கேள்வியை இனிமேல் எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என அரசு தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளி ஞானசேகரன் குற்றத்தை தனியாக செய்துள்ளார். சம்பவ நேரத்தில் அவரது கைபேசி ஃபிளைட் மோட் நிலையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் அப்போது யாருடனும் தொடர்பில் இல்லை என்பதும், சம்பவத்தின்போது எந்த அழைப்பும் வரவில்லை என்பதும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பதிவுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவியை மிரட்டும் நோக்கத்துடன் தான் பல்கலைக்கழக ஊழியரென்று பொய் கூறி, கைபேசியில் யாரையாவது பேசி பேசும் போல் நடித்து ஏமாற்றியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நாளில் (23 ஆம் தேதி) அவரது முதல் அழைப்பு மாலை 6 மணிக்கு வருவதைத் தொலைத்தொடர்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு அவரது கைபேசி ஃபிளைட் மோட்டில் மாறியுள்ளது. இரவு 8.52 மணிக்கு தான் முதல் எஸ்எம்எஸ் வந்ததாகவும், அது மிஸ்டு கால் தொடர்பானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, எந்தவொரு பிறழ்சாட்சிகளும் இல்லாமல், சிறப்புப் புலனாய்வு குழுவின் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளதாகவும், இந்த வழக்கில் ஏற்கனவே தீர்வு வந்துள்ளதால், இப்போது மீண்டும் யார் அந்த சார் என சந்தேகம் எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் வழக்குரைஞர் கூறினார்.