Publish Date: Mon, 30 Nov 2020 (13:29 IST)
Updated Date: Mon, 30 Nov 2020 (13:30 IST)
வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில் தற்போது வங்க கடலின் தென் திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுவடைய உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து டிசம்பர் 2 முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தகவலின் படி வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக 1ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிசம்பர் 2ந் தேதி தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.