Publish Date: Tue, 19 Nov 2019 (09:07 IST)
Updated Date: Tue, 19 Nov 2019 (09:09 IST)
விடுதலையான சில மணி நேரத்தில், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி பகுதியை சேர்ந்த ரவுடி சுந்தர் என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் கைதாகிய சுந்தர், அமரன், செந்தில் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நேற்று சுந்தர், அமரன், செந்தில் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் விடுதலையான அமரனை அவரது தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரும் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். புதுவையில் இருந்து கடலூர் வழியாக அவர்கள் தஞ்சை சென்று கொண்டிருந்தபோது வடலூரை அடுத்த கருங்குழி என்ற பகுதியில் அவர்களை பின் தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களால் அமரனை வெட்டிக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் அமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தன் கண்முனே தனது மகன் அமரன் வெட்டி கொலை செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பாண்டியன் அலறியபடி அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் அந்த கும்பல் அமரன் தந்தையையும் வெட்டிவிட்டு மாயமாகினர். படுகாயமடைந்த அமரன் தந்தை பாண்டியன் தற்போது கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறையில் இருந்து வெளியே வந்த சில மணி நேரத்தில், ரவுடி சுந்தர் கொலையான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.