Publish Date: Tue, 16 Jan 2018 (08:02 IST)
Updated Date: Tue, 16 Jan 2018 (08:10 IST)
காணும் பொங்கலையொட்டி இன்று சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கலையொட்டி மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு கொண்டாட கடற்கரை பகுதிகளுக்கு படையெடுப்பார்கள். மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதுதவிர கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். பொதுமக்கள் கூடும் இடங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுளன. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. போலீசாரின் தடையை மீறி அத்துமீறுபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில் 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.