Publish Date: Wed, 18 Dec 2019 (14:11 IST)
Updated Date: Wed, 18 Dec 2019 (14:12 IST)
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி ஜி வைஷ்னவா கல்லூரியில் வேலை செய்த முன்னாள் பேராசிரியை வகுப்பறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இது அரசு கட்டுபாடற்ற தன்னாட்சி கல்லூரியாகும். இந்த கல்லூரியில் தெலுங்கு பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தனலட்சுமி. இப்போது வேறொரு பள்ளியில் வேலைப் பார்க்கும் இவர் அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன் வந்த அவர் முதல் தளத்தில் அவர் பாடம் எடுத்த வகுப்பறை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அந்த கல்லூரியில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு தனலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.