Publish Date: Wed, 15 Jun 2022 (14:24 IST)
Updated Date: Wed, 15 Jun 2022 (14:28 IST)
ஜோலார்பேட்டை அருகே தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு பள்ளி வகுப்பறையில் வீட்டு உரிமையாளர் குடியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட செட்டேரி கிராமத்தில் கடந்த ஆண்டு புதிதாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 25 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான பள்ளி கட்டிடம் அங்கு இல்லாததால் அங்குள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கிருந்த வகுப்புகளின் ஒன்றில் குடியேறி இருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் நெருக்கி அமர வைத்ததால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். அரசு பள்ளிக்கு தனி நிலம் ஒதுக்கி பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.