தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்பு கொண்டது பொங்கல் திருவிழா.. எனவே 4 நாட்கள் தொடர்ச்சியாக தமிழர்கள் பொங்கல் கொண்டாடவிருக்கிறார்கள். ஒருபக்கம் தமிழக மக்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் சில முறை பொங்கல் தொகுப்போடு பணமும் கொடுக்கப்பட்டு வருகிறது. 2021ஆம் வருடம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் 2500 ரூபாய் கொடுத்தார். அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்களில் மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
இந்நிலையில்தான் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் பணம் வாங்கி விட்டார்கள். அதோடு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஒரு முழு நீள கரும்பும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் கைரேகை சரியாக விழாததால் முதியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருருக்கிறது. அதன்படி கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகையை விநியோகம் செய்யலாம் என உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் தற்போது புதிய உத்தரவு வந்திருக்கிறது. அதோடு விடுபட்டவர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.