Publish Date: Mon, 28 Oct 2019 (17:08 IST)
Updated Date: Mon, 28 Oct 2019 (17:10 IST)
சுர்ஜித்தை உயிருடன் மீட்பதற்கான மீட்பு பணிகள் 70 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் ”குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என பேசுங்கள்” என பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர்.
பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரமும் பழுதடைந்த்தாக தகவல் வெளியானது. பழுதை சரிபடுத்துவதற்கான வேளையில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில். பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்படது. இதுவரை 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து ரிக் இயந்திரத்திற்கு பதிலாக தற்போது 1,200 குதிரை திறன் கொண்ட போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ரிக் இயந்திரத்தின் மூலம் மீண்டும் பணி தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், குழந்தை நல்ல முறையில் மீட்கப்படுவான், அனைத்து ஊழியர்களும் தன் வீட்டு துயரத்தை போல் நினைத்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என கூறியுள்ளார்.
மேலும், “குறைகளை பற்றி பேசாமல், நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும்” எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.