Publish Date: Fri, 30 Apr 2021 (19:59 IST)
Updated Date: Fri, 30 Apr 2021 (19:40 IST)
இந்தக் கருத்துகணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது. இதர கட்சிகளான சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் அரசியல் விமர்சகர்கள் திமுக அதிமுக கட்சிகளில் எதாவது ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தனர்.
அதன்படி தேர்தலுக்கு முந்தைய கருத்துகளைப் போல் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது.
அதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி சுமார் 160 -170 இடங்கள் பெற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தற்போதைய ஆளுங்கட்சியான அதிமுக 58-68 இடங்களில் வெற்று பெரும் எனவும், அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த தினகரன் சுமார் 4 -6 இடங்கள் பெரும் எனவும், கமல்ஹசனின் மக்கள் நீதி மய்யம் 0-2 இடங்களைப் பெரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தலைமை தற்போது ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சட்டசபைத் தேர்தலில் களங்கள் அனைத்திலும் அதிமுக வெல்லும். நம்மைக் கடமைகள் அழைக்கின்றன. வெற்றி மாலை சூட தயாராகுங்கள் எனத் தெரிவித்துள்ளது.
மேலும்,நேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்; சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் போது, அதிமுக வேட்பாளர்க்ள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்தபின்னரே வெளியே வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்துக் கூறியதாவது:
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதிமுக வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் 2, 3 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறபோது இந்தக்கருத்துக்கணிப்புகள் சரியாக அமையாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கருத்துகணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.