Publish Date: Thu, 21 May 2020 (08:33 IST)
Updated Date: Thu, 21 May 2020 (08:35 IST)
சேலத்தில் சிக்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலமாக அனுப்பி வைத்த போது காவலர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஆயுதப்படை வாகன பிரிவின் தலைமை ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் காவலர் சுந்தர். ஊரடங்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் பல காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சேலம் ரயில் நிலையத்தில் சுந்தர் காலையில் காவல் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்படவே அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு மாலை வெளிமாநில தொழிலாளர்களை ரயிலில் அனுப்பி வைக்கும் சமயம் மீண்டும் காவல் பணிக்கு வந்துள்ளார். காவல் பணியில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மாரடைப்பு வந்து அவர் இறந்துவிட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலர் ஒருவர் காவல் பணியில் இருந்த போதே இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.