Publish Date: Sat, 27 Jul 2019 (11:43 IST)
Updated Date: Sat, 27 Jul 2019 (11:47 IST)
சேலம் அருகே தண்ட வாளாத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணியளவில், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் தின்னப்பட்டி-கருப்பூர் பகுதிக்கு இடையே வந்தபோது, தண்ட வாளத்தில் ஒரு பாறாங்கல் இருப்பதை பார்த்துள்ளார் ரயில் ஓட்டுனர். இதையடுத்து உடனே ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் பாறாங்கல் மீது ரயில் மோதி, பாறாங்கல் தூள் தூளாக சிதறியது.
இதன் பிறகு ரயில் ஓட்டுநர், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்திலிருந்த ரயில் தண்ட வாளத்தை ஆய்வு செய்தனர். ரயில் மோதி சிதறிய பாறாங்கல்லையும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அந்த பகுதியில் பகலில் சுற்றித் திரிந்தவர்கள் யார்? என்பது குறித்தும், பாறாங்கல்லை வைத்தது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப்பகுதியின் வழியாக செல்லும் தண்ட வாளம் என்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. ஆதலால் இந்த திட்டத்திற்கு பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் தண்ட வாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த செய்தி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.