அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறிய காவல்துறைக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏரி ஆக்கிரமிப்புகள் ஆய்வின் போது அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று பிறப்பித்துள்ளது. தரமணி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தேவராஜ் மற்றும் எஸ்ஐ கவிதா ஆகிய இருவரும் அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டபடி இருவருக்கும் தலா ஒரு ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து போலீசாரால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கும் இருவரும் தலா ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், இருவரும் தலா 11 ரூபாய் என மொத்தம் 22 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.