Publish Date: Mon, 15 Jan 2018 (15:48 IST)
Updated Date: Mon, 15 Jan 2018 (15:58 IST)
பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா பொதுமக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பொது மேடைகளில் பேசிவருவதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 20 பேர், பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் ஆளித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பொது மேடைகளில் பேசி வரும் எச்.ராஜா இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொதுமக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். மேலும் தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது ஆண்டாள் குறித்து தவறாக பேசியதற்கு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்து வருகிறார்.
மற்ற மதத்தினரைக் கேவலமாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தரக்குறைவாகவும் மேடையில் பேசி வருகிறார். அவாது கலவரமூட்டும் பேச்சால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. எனவே எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சீனுவாசன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது