Publish Date: Sun, 03 Apr 2022 (11:24 IST)
Updated Date: Sun, 03 Apr 2022 (11:27 IST)
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மீது நம்பிக்கை உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை இடஒதுக்கீடுக்கு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாமக, தமிழக அரசு மீண்டும் புதிய இடஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இடஒதுகீட்டை வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தலாம் என்றும் பேசிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீட்டை பெற்று தருவார் என ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் எதிர்பார்க்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்த தேவை இருக்காது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Prasanth Karthick
Publish Date: Sun, 03 Apr 2022 (11:24 IST)
Updated Date: Sun, 03 Apr 2022 (11:27 IST)