Publish Date: Sat, 13 Apr 2019 (08:29 IST)
Updated Date: Sat, 13 Apr 2019 (08:31 IST)
பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதற்கு ரஜினிகாந்த் ரொம்பவே யோசிப்பார் என்று பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நேற்றிரவு மதுரை வந்துள்ளார். இன்று அவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்கின்றார்
இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ரஜினி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, 'பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதற்கு ரஜினி ரொம்பவே யோசிப்பார். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து அவர் கருத்து கூறி இருப்பது மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகரான ரஜினி, சாமன்ய மக்களின் தண்ணீர் பிரச்சினையை பேசி இருப்பது நல்ல விஷயம். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பாஜகவுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக ஆதரவு தந்து கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டியதும், ரஜினிக்கு மோடி நன்றி தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது