Publish Date: Wed, 21 Dec 2016 (11:27 IST)
Updated Date: Wed, 21 Dec 2016 (16:56 IST)
கால் இல்லாது வாழ முடியாது... என்னை கருணைக் கொலை செய்துவிடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலாவிடம் கெஞ்சியதாக மலேசியாவின் பிரபல பத்திரிக்கையான மலேசிய நண்பன் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். மேலும், மருத்துவமனை சிகிச்சைக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கால் இல்லாது வாழ முடியாது... என்னை கருணைக் கொலை செய்துவிடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலாவிடம் கெஞ்சியதாக மலேசியாவின் பிரபல பத்திரிக்கையான மலேசிய நண்பன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை 17-12-16 அன்று மலேசிய நண்பன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த் செய்தி மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.