Publish Date: Thu, 25 Nov 2021 (17:38 IST)
Updated Date: Thu, 25 Nov 2021 (17:42 IST)
கொரோனா காரணமாக உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் நடைமேடை டிக்கெட் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆகியுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது கொரோனா தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா குறைவதும் இந்த விலை குறைப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.