Publish Date: Fri, 26 Oct 2018 (11:58 IST)
Updated Date: Fri, 26 Oct 2018 (12:01 IST)
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் முதியவர்கள் மாவட்ட ஆட்சியர் ரோகினியின் காலில் விழுந்து தங்கள் மனுக்களை அளித்தனர்.
சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு வந்த மக்கள் ரோகினியின் காலில் விழுந்து தங்கள் மனுக்களைக் கொடுத்தனர். இதனால் அங்கே அசாதாரண சூழ்நிலை உருவாகியது. தங்கள் மனுக்கள் நீண்ட நாட்களாக கிடப்பிலேயே இருப்பதாகவும் தங்களுக்கு பட்டா வழங்க தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் ரோஹினியிடம் முறையிட்டனர். அவர்களின் குரையை முழுமையாகக் கேட்காமல் அவர்களை மேடையை விட்டு அனுப்புவதிலேயே ரோஹினியும் மற்றவர்களும் குறியாய் இருந்தனர்.
இதனால் அங்கு வந்திருந்த அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையில் உள்ளோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நபர். ‘ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 5 வருடங்கள் ஆகிவிட்டன. ஆர்டிஓ, தாசில்தார் மற்றும் விஏஓ என அனைவரும் என்னை மாற்றி மாற்றி அலைய வைக்கின்றனர். ஏற்கனவே இது சம்மந்தமாக கலெக்டர் ரோஹினியிடம் 2 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.