Publish Date: Sat, 13 Oct 2018 (10:32 IST)
Updated Date: Sat, 13 Oct 2018 (10:51 IST)
பாடகி சின்மயி தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
கவிஞர் வைரமுத்து, யூடியூப் விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் மீதும் அவர் பாலியல் புகார்களை கூறி அதிர வைத்தார். தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, #MeToo மூலம் வெளியாகும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதித்துறையினர் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “ மீ டூ விவகாரம் தமிழகத்திற்கு தாமதமாக வந்துள்ளது. சின்மயி புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.