Publish Date: Thu, 14 Jul 2022 (18:24 IST)
Updated Date: Thu, 14 Jul 2022 (18:27 IST)
ஓ.பி.எஸ். மகன்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் மகன்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
நீக்கி வைக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சைதை பாபு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒரு சிலரும் இந்த பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது