Publish Date: Fri, 24 May 2019 (06:32 IST)
Updated Date: Fri, 24 May 2019 (06:38 IST)
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி முழு வெற்றியை பெற்ற நிலையில் தேனியில் மட்டும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனா? அல்லது ஈவிகேஎஸ் இளங்கோவனா? என்ற இழுபறி கடைசி வரை இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் வெற்றி யாருக்கு? என்பதை கணிக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் ஒருவழியாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டார். அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்று பெற்றார். அவருக்கு வெற்றிச்சான்றிதழை தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வழங்கினார். அதிமுக கூட்டணியின் ஒரே எம்பியாக தமிழகத்தில் இருந்து ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்பட்டது. அந்த வகையில் இந்த முறையும் திமுக கூட்டணியில் உள்ள யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க் வேண்டும்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கோவில் திருவிழா ஒன்றில் இவரது பெயரை தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பதிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த கல்வெட்டு நீக்கப்பட்டது. இனிமேல் அந்த கல்வெட்டை தாராளமாக வைக்கலாம் என தேனி பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.