Publish Date: Thu, 23 May 2019 (19:43 IST)
Updated Date: Thu, 23 May 2019 (19:44 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெறுவது கடைசி நிமிடம் வரை பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெரும்பாலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றாலும் விசிக தலைவர் திருமாவளவனின் வெற்றி மட்டும் இழுபறியாக உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆரம்பத்தில் இருந்து மிகக் கம்மியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரோடு இழுபறியில் இருந்து வந்தார். இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வர பரபரப்பு அதிமானது. இந்நிலையில் மாலைக்குப் பிறகு திருமாவளவன் 9000 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் பலரும் சிதம்பரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சிஎஸ்கே மேட்ச் பார்ப்பது போல பிரஷரை ஏற்றுவதாகவும் திருமாவளவன் தோனி போல கடைசி கட்டத்தில் சிக்ஸ் அடித்து வெற்றியைப் பதிவு செய்ய உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.