Publish Date: Thu, 08 Mar 2018 (13:02 IST)
Updated Date: Thu, 08 Mar 2018 (13:05 IST)
பெரியார் ஈ.வெ.ரா பற்றி சர்ச்சையான கருத்து தெரிவித்த பாஜாக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.
அதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிவலைகளை உண்டாக்கியது. தமிழகமெங்கும் ஹெச்,ராஜாவிற்கு எதிராக ஆர்ப்பட்டாங்கள் வெடித்தன. அவரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பெரியார் விவாகரம் குறித்து பதிலளித்த ஓ.பி.எஸ் “ ஹெச்.ராஜாவின் கருத்து கண்டனத்திற்குரியது. அதை எனது உதவியாளர்தான் பதிவு செய்தார் எனக் கூறுவது அபத்தமானது. அதை ஏற்க முடியாது. அவரது உதவியாளர்தான் அந்த பதிவை இட்டாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ஹெச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி கூறியிருப்பது ரஜினியின் கருத்து. தற்போது எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என முதல்வர் எடப்பாடி கூறினார்.