Publish Date: Mon, 27 Nov 2017 (14:08 IST)
Updated Date: Mon, 27 Nov 2017 (14:11 IST)
இன்று காலை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி - ஓபிஎஸ் அணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகவே, ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் உள்ளிட்ட சிலர் எடப்பாடி அணியினர் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அனைவரையும் அவர்கள் அரவணைத்துப் போவதில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுகவை வழிநடத்தும் குழுவுக்கான உறுப்பினர்களாக மூத்த தலைவர்களை நியமிப்பதில், எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின் அனைவரையும் சமாதானப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்வோம் எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
ஓபிஎஸ்-எடப்பாடி அணியினர் தொடர்ந்து மோதி வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.