Publish Date: Thu, 22 Dec 2022 (08:56 IST)
Updated Date: Thu, 22 Dec 2022 (08:58 IST)
சென்னையில் ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கியவர் வெடிகுண்டு தயாரிப்பதாக காவல்துறைக்கு புகார் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செல்போன் செயலிகள் தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இவ்வாறான செயலிகள் மூலமாக கடன் பெறுவோர் கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் அல்லது பெரும்பாலும் பணத்தை செலுத்தி இருந்தாலும் கூட கடன் செயலியிலிருந்து போன் செய்து அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுவது, அவர்களது நண்பர்களின் எண்ணுக்கு ஆபாசமான மார்பிங் படங்களை அனுப்பி மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.
இதுகுறித்து பல்வேறு சைபர் க்ரைம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது புதிய ட்ரிக்கை கையில் எடுத்துள்ளன ஆன்லைன் கடன் ஆப்கள். சமீபத்தில் சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக காவல்நிலையத்திற்கு மர்ம போன் கால் வந்துள்ளது. இதனால் மோப்ப நாயுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று போலீஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால் அங்கு அப்படியாக எதுவும் இல்லை. விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட நபர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியிருந்ததாகவும், அவர் கடனை செலுத்தாததால் அவரை மாட்டிவிட ஆன்லைன் செயலியை சேர்ந்தவர்கள் செய்த வேலை இது என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.