Publish Date: Tue, 28 Jan 2020 (08:15 IST)
Updated Date: Tue, 28 Jan 2020 (08:17 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினால் அரசு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கஷ்டப்பட்டு படித்து இந்த தேர்வை எழுதி உள்ள நிலையில் ஒரு சிலர் குறுக்கு வழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து வேலை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இவ்வாறு முறைகேடாக வேலை பெற்றவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை இதுவரை கைது செய்துள்ளனர் என்பதும் அவர்களில் 3 பேர் டிஎன்பிஎஸ்சி முக்கிய பதவியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த சிவராஜ் என்பவர்தான் அவர் என்றும், அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த விவகாரத்தில் கைது நடவடிக்கை நடத்தப்படுவது தெரிந்ததும் தலைமறைவாக இருந்த சிவராஜை சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர் இந்த நிலையில் அவருடைய செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அவர் இருப்பதை கண்டுபிடித்து அங்கு அதிரடி சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவராஜிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது