மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ஓபிஎஸ்
மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ஓபிஎஸ்
திமுக தலைவர் கருணாநிதி இருக்கை விவகாரத்தில், மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து, தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் இருக்கை விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் கெடு விதித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இது போன்ற பேச்சுகளை பலமுறை தமிழக மக்கள் பார்த்து சலிப்படைந்து விட்டனர். இது முறையான, நாகரீகமான பேச்சு அல்ல.
கருணாநிதியின் குடும்ப பிரச்னைகளை மறைக்க பேரவை தலைவர் மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அழகல்ல. எதற்கெடுத்தாலும் மரபுப்படி என்று திமுகவினர் பேசுவதை ஏற்கமுடியாது. காரணம் மரபு எங்களுக்கும் தெரியும்.
பேரவை தலைவரை ஒருமையில் பேசிய ஜெ.அன்பழகனை கண்டிக்க முடியாத மு.க.ஸ்டாலின் மரபுகளை பற்றி எல்லாம் பேசக்கூடாது.
எனவே, இது போன்ற செயல்பாடுகளில் கவனத்தை திசை திருப்பாமல், 20 ஆம் தேதி முதல் பேரவைக்கு வந்து ஆக்கப்பூர்வ விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.