Publish Date: Thu, 21 May 2020 (17:58 IST)
Updated Date: Thu, 21 May 2020 (18:00 IST)
தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல கோடி ரூபாயை செலவு செய்து வருகிறது
தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்த போதிலும் அந்த பணம் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு போதுமானதாக இல்லை. இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது
அதன்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசு பணியில் அலுவலர் பணிகள் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது
அதேபோல் கருணை அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து நிரப்பலாம் என்றும் கொரோனாவால் செலவினங்களை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரபரப்பு முடியும் வரை தமிழக அரசு பணிகளில் புதிய பணியிடங்கள் நிரப்புவது இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது