Publish Date: Wed, 25 Nov 2020 (20:01 IST)
Updated Date: Wed, 25 Nov 2020 (20:04 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் கரையை கடக்கும் இடம் மற்றும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதி தீவிர புயலாக உள்ள நிவர் கரையை நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புயலின் வெளிவிளிம்பு பகுதி ஏற்கனவே கரைப்பகுதியை தொட்டு விட்டதாக கூறிய வானிலை ஆய்வு மையம் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் நிவர் புயல் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் திசையில் வடகிழக்கில் நகர்ந்துள்ளதால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 12 கி.மீ ஆக குறைந்துள்ளதால் புயலின் மையப்பகுதி அதிகாலை 3 மணியளவில்தான் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இதனால் முழுதாக புயல் கரையை கடந்து முடிக்க காலை 10 மணி ஆகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.