Publish Date: Tue, 06 Feb 2018 (12:45 IST)
Updated Date: Tue, 06 Feb 2018 (12:58 IST)
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. நீட் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பெரும் பாதிப்படைந்தனர்.
நீட் தேர்வால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும் மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கவில்லை. மாநில அரசும் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொடுக்க உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நெருங்க உள்ளது.
ஆனால் இன்னும் நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு ஆரம்பிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த நீட் விவகாரம் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவோம். முடியாவிட்டால், நீட் தேர்வில் காப்பியடிக்க மாணவர்களை அனுமதிப்போம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.