Publish Date: Wed, 09 May 2018 (12:38 IST)
Updated Date: Wed, 09 May 2018 (12:41 IST)
மாணவர்களை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவியின் பூட்டப்பட்ட வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி, அந்த கல்லூரியின் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் குழு தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.
சந்தானம் தரப்பு தனது விசாரணையை முடித்து விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியாநகரில் உள்ள அவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இது வழக்கமான கொள்ளை முயற்சியா இல்லை அவரது வீட்டில் உள்ள ஆவணங்களை எடுத்து செல்லும் முயற்சியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.