Publish Date: Thu, 26 Jul 2018 (15:29 IST)
Updated Date: Thu, 26 Jul 2018 (15:32 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் உள்பட தமிழக பாஜக பிரமுகர்கள் மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நடுநிலை வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் இவர்களது செயல்பாடுகளும் பேச்சுக்களும் இல்லை. குறிப்பாக எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு காரணமாக தமிழகத்தில் பாஜக மேலும் பலவீனம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுவாக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகவே அவர் அடிக்கடி தமிழக விசிட் அடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சந்தேகத்தை தற்போது வெளிப்படையாகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும், பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்றும் அவர் சற்றுமுன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால் துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களின் சகோதரருக்கு விதிமுறைகளை மீறி ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்வர் கனவு, கனவாகவே போய்விட்டதாக கூறப்படுகிறது