Publish Date: Wed, 10 Nov 2021 (10:34 IST)
Updated Date: Wed, 10 Nov 2021 (12:22 IST)
தமிழகம் முழுவதும் அதி கனமழை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களுக்கு பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை , சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.