Publish Date: Wed, 05 Jun 2019 (13:56 IST)
Updated Date: Wed, 05 Jun 2019 (15:23 IST)
இந்தியாவெங்கும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பொதுதேர்வான நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த மே 5 அன்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. ஒடிசாவில் மட்டும் ஃபானி புயல் தாக்கம் காரணமாக மே 20ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் 48 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக டெல்லி உள்ளது. அதன் தேர்ச்சி விழுக்காடு 74.92%. இந்திய அளவில் நீட் தேர்வில் முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. தமிழ்நாட்டளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி ஸ்ருதி தேசிய அளவில் 57ம் இடம் பெற்றுள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.