Publish Date: Fri, 17 Nov 2017 (15:28 IST)
Updated Date: Fri, 17 Nov 2017 (15:31 IST)
சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த 2010ம் ஆண்டு சிபிஐ முதன்மை நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அதில், நடராஜன் உட்பட அனைவருக்கும் தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்ப 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சசிகலாவின் அக்கா மகள் மற்றும் அவரின் கணவர் பாஸ்கரன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2008ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் பாஸ்கரனுக்கு அளித்த 5 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.20 லட்சம் அபராதம், அவரின் மனைவி சீதளதேவிக்கு அளித்த 3 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதத்தை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில்தான் இன்று நடராஜன் உள்ளிடோருக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருவது, அவரின் குடும்பத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.