Publish Date: Fri, 31 Aug 2018 (22:28 IST)
Updated Date: Fri, 31 Aug 2018 (22:29 IST)
திமுகவின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்ட மு.க.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்ட நிலையில் அழகிரிக்கு மட்டும் அவர் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. இவ்வளவிற்கு ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்று அழகிரி வாய்விட்டு சொன்ன பிறகும் ஸ்டாலின் மெளனம் தொடர்கிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய நாஞ்சில் சம்பத், '`அழகிரி தென்னகத்தின் அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய மந்திரி, அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு வல்லமை கொண்டவர். அவரே, தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறும்போது அவரிடத்தில் வேறு ஏதும் அரசியல் உள்ளதுபோல் எனக்குத் தெரியவில்லை. அதற்கு மேல் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பந்து, ஸ்டாலின் மைதானத்தில் உள்ளது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும் அழகிரியை ஏற்றுக்கொண்டால் தி.மு.க வலிமைபெறும். அரசியலில் எண்ணிக்கைதான் முக்கியம்” என்றார்.
மேலும் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து கருத்து கூறிய நாஞ்சில் சம்பத், இந்த இரண்டு தொகுதிகளிலும் நிறுத்தப்படுகின்ற வேட்பாளரைப் பொறுத்தே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்று கூறியுள்ளார்.