Publish Date: Wed, 22 Jul 2020 (16:33 IST)
Updated Date: Wed, 22 Jul 2020 (16:35 IST)
வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினியின் உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி திடீரென நேற்று முன் தினம் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி திடீரென துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
நளினிக்கும் சக கைதி பெண் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த பெண் கைதி சிறை அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், சிறை அதிகாரி நளினியை விசாரித்ததால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் சிறை அதிகாரிகள். அங்கு நளினியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கழுத்தில் எந்த காயமும் இல்லை எனவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளனர். நளினியின் தாயார், அவரை புழல் சிறைக்கு மாற்ற சொல்லி வேண்டுகோள் வைத்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.