திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி படித்துவந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள மூடிய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள கோத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி விடுதியில், 9-ஆம் வகுப்பு முதல் படித்து வந்த முகிலன் என்ற மாணவர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது, முகிலன் வீட்டிற்கும் வரவில்லை என்பது தெரியவந்தது.
மாணவரின் தந்தை சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவரைத் தேடி வந்தனர்.காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள, இரும்பு கிரில் மூலம் மூடப்பட்டிருந்த ஒரு கிணற்றில் மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்டபோது, கிணற்றின் மூடி மூடப்பட்டிருந்ததால், அதில் சந்தேகமிருப்பதாக மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.