Publish Date: Sat, 21 Dec 2019 (15:57 IST)
Updated Date: Sat, 21 Dec 2019 (16:01 IST)
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வரும் நிலையில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு சம்பவம் மக்கள் மனதை நெகிழ வைப்பதாக உள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள், எதிர் கட்சிகள் என பலர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் நார்ரின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பதட்டமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதோடு கடைகளும் அடைக்கப்பட்டன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டதால் பாலாக்காடு. பொள்ளாச்சி சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.
நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது மாலை நேரத்தில் சாலை முழுவதுமாக முடங்கி கிடந்தபோது அந்த வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக வந்துள்ளனர். போராட்டம் நடைபெற்று வருவதால் கடந்து செல்ல இயலுமா என்ற தவிப்பில் நின்ற பக்தர்களை இஸ்லாமியர்கள் சிலர் போராட்டக்காரர்களை ஒதுங்க செய்து வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.