Publish Date: Fri, 19 Nov 2021 (10:57 IST)
Updated Date: Fri, 19 Nov 2021 (11:34 IST)
தேர்தல்களை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது வெட்கக்கேடானது என திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு.
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே இது குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது, விவசாயிகளிடம் எந்த கருத்துகளும் கேட்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தான் வேளாண் சட்டங்கள். சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு 3 மாதங்கள் அவகாசம் கேட்டோம், மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் நிறைவேற்றியது. பஞ்சாப், உ.பி. தேர்தல்களை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது வெட்கக்கேடானது என கூறினார்.