Publish Date: Tue, 31 Jan 2017 (11:28 IST)
Updated Date: Tue, 31 Jan 2017 (11:31 IST)
ஜல்லிகட்டுக்காக போராடிய மாணவர்களுக்காக கோவையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். அதன்பின் அவர்களோடு பொதுமக்களும் இணைந்து போராடினார். அதனால், வேறு வழியின்றி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தற்போது அந்த சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
எந்த தலைமையும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி இரவு, பகல் பாராமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்கள் கூட மெரினாவில் பாதுகாப்பாக இரவில் தங்கினர்.
உலகமே வியக்கும் வண்ணம் தமிழக மாணவர்களின் போராட்டம் திகழ்ந்தது. எனவே அதை நினைவுப்படுத்தும் விதமாக, கோவை வ.உ.சி பூங்காவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த பூங்காவில்தான் ஆயிரக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடினார்கள் என்பதும், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.