சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் ஒரிசா பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 4 முதல் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள், ஆந்திரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.