Publish Date: Mon, 11 Dec 2017 (17:32 IST)
Updated Date: Mon, 11 Dec 2017 (18:13 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து கட்சியினரும் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது.
வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், ஆர்.கே.நகர் தொகுதி களை கட்டியுள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் இந்த முறை பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. ஆனாலும், அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு வெவ்வேறு புதிய வழிகளில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு வீட்டில் எத்தனை ஒட்டுகள், அவர்கள் தொலைப்பேசி எண்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு விட்டது. அதன்படி, படித்த பெண்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். செல்போன் வழியாக தொகுதிக்கு வெளியே அழைத்து பணப்பட்டுவாடாவை அவர்கள் கச்சிதமாக செய்கின்றனராம். தினமும் 100 குடும்பத்திற்கு பணப்பட்டுவாடா செய்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் கொடுக்கப்படுகிறதாம். அதோடு, வாக்களர்களை சொல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டார்களா என ஒரு குழுவினர் ஆய்வு செய்கின்றனராம்.
சில கட்சி ஓட்டுக்கு ரூ.10 ஆயிரமும், சில கட்சிகள் ரூ.5 ஆயிரம் என குடும்பத்திற்கு 20 ஆயிரம் வரை கிடைக்கிறதாம். மேலும், பணத்தை பெற்றுக்கொண்டு உங்களுக்குதான் ஓட்டுப் போடுவேன் என சத்தியமும் வாங்குகிறார்களாம். சில கட்சியினர் ரகசிய எண் எழுதப்பட்ட துண்டு சீட்டை கொடுக்கின்றனர். அதை மளிகை கடையில் கொடுத்து பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதாம்.
ஆனால், இது தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். எனவே, அதை வாங்கிக் கொள்வோம். ஆனால், மனசாட்சி படியே வாக்களிப்போம் எனவும் சிலர் கூறி வருகின்றனராம்.
சென்ற முறை தேர்தல் அதிகாரியாக இருந்த இதே பிரவீண் நாயர், பணப்பட்டுவாடா மோப்பம் பிடித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதன் விளைவாகவே தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும், அவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பணப்பட்டுவாடாவை கண்டறிந்தால் தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.