Publish Date: Thu, 24 May 2018 (17:33 IST)
Updated Date: Thu, 24 May 2018 (17:37 IST)
தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதே போன்று வீடியோ வெளியிடும்படி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு சவால் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு தனது டாஸ்கை முடித்துவிட்டதாக தெரிவித்தார்.
அதோடு, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, கேப்டன் தோனி ஆகியோரை இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை செய்யும்படி கூறியிருந்தார். இந்நிலையில் கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தெரிவித்திருந்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீசார் சுட்டதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மோடி அதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், விராட் கோலியின் சவாலை ஏற்பதாக அவர் டிவிட் செய்திருக்கிறார்.
எனவே, விராட் கோலிக்கு பதில் கூறும் மோடி, ஏன் தூத்துக்குடி விவகாரம் குறித்து பேச மறுக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.