Publish Date: Thu, 24 May 2018 (16:49 IST)
Updated Date: Thu, 24 May 2018 (16:52 IST)
பராமரிப்பு பணி காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை பெற்று மீண்டும் ஆலையை திறக்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிறுவனர் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆலையின் நிறுவனர் அனில் அகர்வால் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடியில் மக்கள் மரணமடைந்தது சோகமான நிகழ்வு. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். பராமரிப்பு பணிக்காக ஆலை தற்போது முடப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசிடமிருந்து உத்தரவைப் பெற்று ஆலை மீண்டும் திறக்கப்படும் என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
அந்த ஆலையால் ஏற்கனவே பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் போராட்டம் நடத்தி அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் இந்த ஆலை செயல்படாது எனக் கூறியிருந்த நிலையில், ஆலை மீண்டும் திறக்கப்படும் என அனில் அகர்வால் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.