Publish Date: Wed, 02 Jun 2021 (10:26 IST)
Updated Date: Wed, 02 Jun 2021 (10:30 IST)
இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என பெயர் சூட்டியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் பிரமுகர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உருமாறிய கொரோனா வேறு சில நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதை இந்திய கொரோனா என பலரும் அழைப்பது குறித்து இந்திய அரசு அதிருப்தி தெரிவித்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவிலிருந்து பரவிய உருமாறிய கொரோனாவிற்கு டெல்டா என பெயரிட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளர் பொன்னுசாமி ”உருமாறிய கொரோனாவிற்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவின் பெயரை சூட்டுவதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு கிரேக்க மொழியில் இருந்த டெல்டா என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.